Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘சந்தர்ப்பவாதம்’ Category

COMMUNIST PARTY OF INDIA (MUMMYIST)
 
COMMUNIST PARTY OF INDIA (MUMMYIST)

போயஸ் தோட்டத்திற்கு நவம்பர் மாதம் ஐயும் — அதாவது வலதும், டிசம்பர் மாதம் எம்மும் — அதாவது இடதும் விஜயம் செய்தார்கள். ஐக்கு பரதன், தா.பாண்டியன், சி.மகேந்திரன் போன்றோரும், எம்முக்கு பிரகாஷ் காரத்தும்,

 வரதராசனும் தோட்டத்தில் உள்ளேன் ஐயா சொல்லி, அம்மாவுடன் பேசிவிட்டு வந்தார்கள். அதிலும் காரத்துடன் சென்றிருந்த தோழர்கள் புரட்சித் தலைவிக்கு பிடித்த இளம் பச்சைச் சட்டையில் சென்றிருந்தார்களாம்.

அம்மாவுக்கு இணையாக தோழர்கள் அமர்ந்த அந்த நாற்காலியை வாண்டையார், சேதுராமன், சுப்பிரமணிய சுவாமி, அத்வானி, ஜஸ்வந்த் சிங், மோடி, வைகோ முதலானோர் ஏற்கெனவே தேய்த்திருக்கிறார்கள் என்பதால், அதுவும் வரலாற்றுச் சிறப்புமிக்கதுதான். தானைத் தலைவியின் முன் சற்று சங்கோஜத்துடன் பேசிய தோழர்களுக்கு மோடிக்கு கொடுக்கப்பட்ட விருந்து போல வரவேற்பு இல்லையென்றாலும், சந்திப்பு அணுக்கமாகத் தான் நடந்தது. புரட்சித் தலைவிக்கு பிரகாஷ் காரத் கொடுத்த பெரிய பூச்செண்டு படம் எல்லாப் பத்திரிகைகளிலும் இடம் பெற்றன.

அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு மைய அரசு பணிந்ததை ஒரு வருடமாக எதிர்ப்பது போல எதிர்த்து, மிரட்டுவது போல மிரட்டி, எச்சரிப்பது போல எச்சரித்து, அழுவது போல அழுது, இன்னும் பல செய்து பார்த்து, இறுதியில் காங்கிரசு கூட்டணி அரசு, “போடா வெண்ணை” என்று தூக்கி எறிந்ததும் வேறு வழியின்றி ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டார்கள், போலிகள். ஒருவேளை காங்கிரசு அரசு கவிழ்ந்தால், அடுத்த தேர்தலில் என்ன செய்வது என்ற கவலை அவர்களை வாட்டியது. முன்னெச்சரிக்கையாக அடுத்த தேர்தலில் பா.ஜ.க தோற்று, காங்கிரசு வென்றால் மீண்டும் ஆதரவு உண்டு என்பதைத் தோழர்கள் சுற்றி வளைத்து ஒத்துக் கொண்டார்கள். ஆனால், தேர்தலில் கடந்த முறை வெற்றி பெற்ற தொகுதிகளாவது மீண்டும் கிடைக்க வேண்டுமே என்ற கவலை தோழர்களை வாட்டியது.

தோழிகளுக்கும் தோழர்களுக்கும் சகாவான சாதி வெறியன் முத்துராமலிங்கன்

தோழிகளுக்கும் தோழர்களுக்கும் சகாவான தேவர் சாதி வெறியன் முத்துராமலிங்கனுக்கு மாலையிடும் தோழர் ஜெ

இடையில் மூன்றாம் அணி என்று சற்று “பாவ்லா” காட்டினார்கள். “குடியரசுத் தலைவர்’ தேர்தலிலேயே இந்த மூன்றாம் அணி தோன்றிய வேகத்தில் பறந்து விட்டது. முக்கியமாக அம்மா கட்சி தேர்தலைப் புறக்கணிப்பதாக சவடால் அடித்து, பின்னர் பா.ஜ.க.விற்கு வாக்களித்து மூன்றாவது அணியின் தகுதியை உலகுக்கு அறிவித்தது.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்ட உடனேயே பிரகாஷ் காரத் சண்டமாருதம் செய்து முழங்கிய சேதி என்னவென்றால், காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல், அதிலிருந்து மாநிலக் கட்சிகள் வெளியேற வேண்டுமென்பதாகும். இந்த முழக்கத்தைக் கேட்ட பிறகு தான் முலாயம் போன்ற கட்சிகள் கப்பலில் இடம் பிடித்தனர். அம்மாவும் எவ்வளவோ முயற்சிகள் செய்து பார்த்தும் காங்கிரசு அவ்வளவாக அசைந்து கொடுக்கவில்லை. இதனால் அவர் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதாகச் செய்திகள் அடிபட்டன. தமிழக பா.ஜ.க.வும் இதை வெளிப்படையாக ஒரு கோரிக்கையாக வைத்தும், அம்மாவின் மனதை கரைக்கும் வண்ணம் பல அறிக்கைகளை வெளியிட்டும் நோட்டம் பார்த்தது. அப்போது அம்மா எடுத்த முடிவு என்னவென்றால், தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணி, தேர்தலுக்கு பின்பு வேறு ஒரு கூட்டணி! இப்போது தேர்தலுக்குப் பின்னர்தான் கூட்டணி என்பதையும் கூச்ச நாச்சமின்றி பா.ஜ.க. ஏற்றுக் கொண்டு கச்சேரியை செய்து வருகிறது.

இத்தகைய புரட்சிகரமான தருணத்தில் ஐய்யுக்கும் எம்முக்கும் அடித்தது ஜாக்பாட். ஏற்öகனவே புரட்சித் தலைவியின் இரசிகராக அறியப்பட்ட வலதின் தா.பாண்டியன், எதிர்காலத்தில் அம்மாவுடன் கூட்டணி வைக்கப் போகும் தருணத்தை முன்னறிந்து கருணாநிதியை அம்மா ரேஞ்சுக்கு கண்டித்து அறிக்கை வெளியிட்டு வந்தார். அதனால்தான் இடதுகளை விட அதிவேகத்தில் ஒரு மாதம் முன்னதாகவே அம்மாவைச் சந்தித்து கூட்டணிக்கு அச்சாரம் போட்டார். இது எம்முக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியது. அவர்கள் விஜயகாந்துடன் கூட்டணி வைக்கலாமா என்று ஒரு மயக்கத்தில் இருந்ததால், புரட்சிக் கலைஞரையும் சந்தித்து நோட்டம் பார்த்தார்கள். அதைப் பரிசீலித்து முடிவெடுப்பதற்கு முன்னதாக அம்மாவைச் சந்திக்க வேண்டும் என்று நெருக்கடியை தா.பாண்டியன் உருவாக்கி விட்டார். இதில் தாமதித்தால் ஐயை விட எம்முக்கு ஓரிரு சீட்டுகள் குறைந்து விட்டால் என்ன செய்வது?

தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைப்பது என்று “மார்க்சிஸ்ட்’ கட்சியின் மாநிலக் குழுவில் ஒத்த கருத்து இல்லையென்பதால், முடிவு எடுக்கும் உரிமை அரசியல் தலைமைக் குழுவிடம் அளிக்கப்பட்டதாம். அரசியல் தலைமைக் குழுவும் அரட்டை கச்சேரி நடத்தி எடுத்த ஒரே முடிவு என்னவென்றால், தேர்தலில் அம்மாவுடன் கூட்டணி வைப்பது என்பதுதான்.

 

அனைத்து இந்திய அய்யர் தி.மு.க‌

அனைத்து இந்திய அய்யர் தி.மு.க‌

இந்த முடிவை கனத்த இதயத்தோடு பிரகாஷ் காரத் மாநிலக் குழுவிடம் தெரிவித்ததாக “நக்கீரன்” எழுதியிருந்தது. இவ்வளவு சென்டிமெண்டோடு சி.பி.எம். பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து, சென்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளை வென்றது “மார்க்சிஸ்ட்’ கட்சி. இப்போது காங்கிரசோடு வலுவான கூட்டணியாகத் திகழும் தி.மு.க. இந்த உறவை முறித்துக் கொள்வதாக இல்லை. அதனால் சி.பி.எம். சென்றதால் கருணாநிதியொன்றும் கவலைப்படவில்லை. மொத்தத்தில் நான்கு தொகுதிகள் மிச்சம் என்பது அவர் கணக்கு. போலி கம்யூனிஸ்டுகளைப் பொருத்தவரை அந்த நான்கு தொகுதிகளையும் மீண்டும் பெறவேண்டுமென்றால் அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி வைக்க வேண்டும்.

ஆக மொத்தம், இரண்டு அல்லது ஒன்றரை சீட்டுக்களுக்காக அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்று சொல்லி விட்டுப் போகவேண்டியது தானே? மாறாக, பயங்கரமான ராஜதந்திர முடிவு எடுத்தது போல, சி.பி.எம் “பில்டப்” கொடுப்பதைத்தான் சகிக்க முடியவில்லை. அதாவது காங்கிரசு, பா.ஜ.க. இரண்டு கட்சிகளையும் போலிகள் எதிர்க்கிறார்களாம். அதனால் மூன்றாவது அணிக்கு வலிமை சேர்க்கும் வண்ணம் பல மாநிலக் கட்சிகளை இழுப்பதுதான் அவர்களது தொலைநோக்கு அரசியலாம். சரி, இருக்கட்டும்.

மதவாதம், காங்கிரசு இரண்டு சக்திகளையும் எதிர்க்கத் துணிந்த போலிகள் அம்மாவை மதவாதமில்லையென்று கருதுகிறார்களா? மதமாற்றத் தடை சட்டம், ஆடுகோழி பலியிடுவதைத் தடை செய்யும் சட்டம், மோடி பதவியேற்பு விழாவில் நேரடியாக கலந்து கொண்டது, சென்னைக்கு மோடி வந்தபோது அழைத்து விருந்து வைத்தது, சேது சமுத்திர திட்டத்திற்கு எதிர்ப்பு — இப்படி பலமுறை அம்மா தான் ஒரு இந்துமதவெறி பாசிஸ்ட் என்று நிரூபித்திருக்கிறார்களே? இன்னும் சொல்லப்போனால், அம்மாவின் இந்துத்வ வேகம் பா.ஜ.க.வை விட அதிகமாகத்தானே இருக்கிறது? எல்லவாற்றுக்கும் மேலாக தேர்தல் முடிந்ததும் அ.தி.மு.க., பா.ஜ.க. பக்கம் சாயும் என்பதை எல்லா பத்திரிகைகளும் எழுதுகின்றன. மூன்றாவது அணி கணிசமாகத் தோல்வியுறும் பட்சத்தில் அம்மா தாமரை யோடு சங்கமிப்பார் என்பதை போலிகளும் மறுக்க முடியாதல்லவா?

 ஊரை அடித்து உலையில் போட்ட கொள்ளைக்காரிகள் ஜெயா&சசி கும்பல்

ஊரை அடித்து உலையில் போட்ட கொள்ளைக்காரிகள் ஜெயா&சசி கும்பல்

அம்மாவின் கணக்கு, தேர்தலின் போது முசுலீம்களின் வாக்குகள் வேண்டும், அதனால் பி.ஜே.பி.யுடன் கூட்டணி கிடையாது. தேர்தலுக்கு பின்னர் பா.ஜ.க.வுடன் கூட்டு வேண்டும், அப்போது போலிகளுடன் கூட்டணி கிடையாது. இப்படி ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை சுருட்டும் ராஜதந்திரத்தில் அம்மா தானே செல்வாக்கு செலுத்துகிறார்? இப்படி மறைமுகமாக பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்குத்தான் போலிகளின் இந்தக் கூட்டணி தந்திரம் உதவுகிறது. ஆயினும், இந்த சந்தர்ப்பவாதத்தை போலிகள் ஒத்துக் கொள்வதில்லை. அவர்களைப் பொருத்தவரை தேர்தலுக்கு பின் காங்கிரசு மற்றும் பா.ஜ.க. இரண்டும் தோல்வியுற்று மூன்றாவது அணி ஆட்சிக்கு வரும் பட்சத்தில், இடதுசாரிகளுக்கு நிறைய எம்.பி.க்கள் வேண்டுமாம். ஆதலால் எந்த எழவுடனும் கூட்டணி வைத்துக் கொண்டு நிறைய சீட்டுக்களை அள்ள வேண்டுமாம்.

இரண்டு சீட்டுக்களுக்காக இல்லாத கொள்கைகளையெல்லாம் கூறி தமது சந்தர்ப்பவாதத்தை வெளிப்படுத்தும் போலிகளிடம், அம்மா கறாராக கூறியிருக்கும் விசயம் என்னவென்றால், மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளராக மாயாவதியை முன்னிறுத்தக் கூடாதாம். இந்த ஒரு விசயமே மூன்றாவது அணியின் வலுவை விளக்கப் போதுமானது. அடுத்து தேர்தலுக்கு பின் மூன்றாவது அணி தோல்வியுற்று காங்கிரசு, பா.ஜ.க. இரண்டுமே சம அளவில் வெற்றி பெற்றால் போலிகள் என்ன செய்வார்கள்? மதவாதத்தை அனுமதிக்க கூடாது என்று காங்கிரசுக்கு ஆதரவு தருவார்கள். அநேகமாக இதுதான் நடக்கப்போகும் உண்மையென்றால், இப்போது ஏன் காங்கிரசுக்கு ஆதரவை விலக்க வேண்டும்? தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி, தேர்தலுக்கு பின்பு சேரத்தான் போகிறார்கள் என்றால் இவர்களது சந்தர்ப்பவாதம் அம்மாவை விஞ்சுகிறதே?

இவ்வளவும் எதற்காக? எல்லாம் இரண்டு சீட்டுக்களுக்காக என்றால் அதை அப்படி ஒத்துக் கொண்டு போகவேண்டியதுதானே? அதை விடுத்து அதற்கு கொள்கை முலாம் பூசவேண்டிய அவசியமென்ன? நாடாளுமன்ற சகதியில் புரண்டு கொண்டே அதை சந்தனமென்று சாதிப்பதற்கு என்னவெல்லாம் செய்கிறார்கள்? நேரடியாகச் சொல்வதென்றால் போலிகளின் காங்கிரசு எதிர்ப்பு, பா.ஜ.க. எதிர்ப்பு இரண்டுமே அப்பட்டமான பொய். ஒன்றை நேரடியாகவும், மற்றொன்றை மறைமுகமாகவும் ஆதரிக்கிறார்கள் என்பதைத்தான் அம்மாவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு போலிகள் உலகுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.

 இளநம்பி

புதிய ஜனநாயகம் ஜன 09

Read Full Post »

1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஹிரோஷிமா நகரின் மீது அணுகுண்டு வீசி 70,000 மக்களைக் கொன்று குவித்ததுடன் இன்றுவரை அங்கே பிறக்கும் குழந்தைகள் ஊனமுற்றவர்களாகப் பிறக்கும் அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியது அமெரிக்கா. அதற்கு 3 நாட்களுக்குப் பிறகு இன்னொரு ஜப்பானிய நகரமான நாகசாகியில் தனது கொலைவெறியை அரங்கேற்றி 74,000 மக்களைக் கொன்று குவித்தது.

மனித குலத்தையே வேரறுக்கக் கூடிய இந்த அணு ஆயுதத்தை முதன்முதலில் மனிதன் மீது பிரயோகித்த பெருமையைத் தன்னுடைய தாக்கிக் கொண்டாலும், அந்த அணுசக்தியிலிருந்து பலன் பெற்று மின்சாரம் தயாரிக்கும் வழிமுறை அமெரிக்காவிடம் இல்லை. சோவியத் ரஷ்யாவில்தான் 1954 ஆம் ஆண்டு முதன் முதலில் அணுசக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டது. ஆனால் அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 1951 ல் இருந்தே இந்தியாவில் அணுசக்தி குறித்த ஆராய்ச்சிகளையும், அணு உலைகளை அமைத்து அணுசக்தியை மக்கள் நலனுக்குப் பயன்படுத்துவது பற்றியும் இந்திய அணுசக்தித் துறையின் தந்தை என அழைக்கப்படும் ஹோமி பாபா திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளார்.
அப்போதிருந்தே உலக அளவில் அணுசக்தித் துறையில் மற்ற நாடுகளுடன் இந்தியா போட்டி போட்டு வளர்ந்து வருகிறது. இன்றளவும் அதிவேக ஈனுலைகள் என்ற அணுசக்தித் தொழில்நுட்பத்தில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. தோரியம் எனும் தனிமத்தைக் கொண்டு இயங்கக் கூடிய இந்த “அதிவேக ஈனுலைகள்” யுரேனியம் கொண்டு இயங்கும் மற்ற நாட்டு அணு உலைகளை விட 600 மடங்கு அதிக சக்தியைக் கொண்டது என்று முன்னாள் இந்திய அணுசக்தித்துறைத் தலைவர் சிதம்பரம் கூறியுள்ளார்.
இது மட்டுமின்றி வேறெந்த நாட்டின் உதவியுமின்றி சொந்தநாட்டிலேயே தயாரித்து, இதுவரை இரண்டு முறை அணு குண்டு வெடித்துச் சோதனை நடத்தியுள்ளது இந்தியா.இவ்வாறு மின்சாரத் தேவைக்கான அணுசக்தி ஆராய்ச்சி தொடங்கி, பக்கத்து நாடுகளை மிரட்டி அணுகுண்டு வெடிப்பது வரை இந்தத் துறையில் சொந்தத் தொழில்நுட்பத்தையே இந்தியா பயன்படுத்தி வந்துள்ளது.
ரஷ்யாவின் உதவியுடன் கல்பாக்கத்திலும், அமெரிக்காவின் உதவியுடன் தாராப்பூரிலும் அணுமின் நிலையங்களை நிறுவினாலும் அவை முற்றிலும் இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவையாகவே இருந்துள்ளன.
ஆனால் இப்போது ‘123 ஒப்பந்தம்’ என்ற பெயரில் அமெரிக்காவுடன் இந்தியா செய்துள்ள அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவின் இறையாண்மைக்கு ஆப்பறையும் விதத்தில் வந்துள்ளது.
அமெரிக்க அடிமையாக வாழ்வதையே சுகம் என கருதும் உளவாளி மன்மோகன்
இந்த ஒப்பந்ததின்படி அடுத்த 40 ஆண்டுகளுக்குத் இந்தியா அமெரிக்காவிடமிருந்து யுரேனியத்தை இறக்குமதி செய்து கொள்ளும். அப்படி இறக்குமதி செய்யும் யுரேனியத்தைக் கொண்டு மின்சாரம் மட்டுமே தயாரிக்க வேண்டும், அணுகுண்டு தயாரிக்கக் கூடாது. மீறி அணுகுண்டு தயாரித்தால் அமெரிக்கா கொடுத்த யுரேனியத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளும். இந்த யுரேனியத்தை நம்பி இந்தியா பல லட்சம் கோடி செலவில் அணு உலைகளை உருவாக்கியிருந்தாலும் அது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. அணுகுண்டு வெடிக்காவிட்டாலும் அமெரிக்காவின் அனைத்து ராணுவ நடவடிக்கைகளுக்கும், வெளிநாட்டுக் கொள்கைகளுக்கும் இந்தியா ஒத்துழைப்புத் தரவேண்டும்.
ஏற்கனவே இரண்டு முறை ஈரான் -க்கு எதிராக ஐ.நா வில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு இந்தியா வாக்களித்து உள்ளது.
இப்போது ஈரானை தாக்க அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. அவ்வாறு தாக்குதல் தொடுக்குமானால் அப்போது இந்தியா கூலிப்படை அனுப்பி உதவ வேண்டும்.
அதேபோல மற்ற நாடுகள் அனுமதிக்காத ‘நிமிட்ஸ்’ போர்க் கப்பலை இந்தியக் கடலோரத்தில் இந்தியா அனுமதித்து உள்ளது. அந்த கப்பல் போர்க்கழிவுகளை கொட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதேபோல எதிர்காலத்திலும் இதுபோன்ற கப்பல்களை தங்கு தடையின்றி வந்து போக அனுமதிக்க அமெரிக்கா நிர்பந்திக்கிறது.
அணு ஆராய்ச்சியை இந்திய விஞ்ஞானிகளைக் கொண்டு, குறைந்த விலைக்கு நடத்தித் தர அமெரிக்கா கோருகிறது.அணு உலைகளை கண்காணிக்க நிபுணர்குழுவினை இந்தியாவுக்குள் வந்து போக அணுமதிக்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறது..
இப்படிப்பட்ட நாசகார, மோசடியான ஒப்பந்தத்தை தாய்நாட்டின் மீது பற்றுக் கொண்ட யாரும் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள்.
ஆனால் அமெரிக்க அடிமை நாயாய் சேவகம் செய்யும் மன்மோகன் சிங் இதனை ஏற்று கொண்டுவிட்டார். மக்களையே சந்திக்காமல், தேர்தலிலேயே நிற்காமல் இந்த நாட்டின் பிரதம மந்திரியாய் உட்கார்ந்து கொண்டு இப்படி தாய்நாட்டை அமெரிக்காவுக்கு விலை பேசியுள்ளார்.
“நீ என்ன வேண்டுமானாலும் கூறிக்கொள், உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள். ஆனால் ஒப்பந்தத்தை திரும்ப பெற முடியாது. குறைந்த பட்சம் இது குறித்து விவாதம் செய்ய முடியாது.” என்று மன்மோகன் சிங் கூறிகிறார்.
அமெரிக்க எஜமானன் போட்ட உத்தரவை இந்திய அடிமைகள் பரிசீலிப்பதா என்று இவர் விடும் அறிக்கைகளைப் படிக்கும் போது சிறிதளவேனும் தேசப்பற்றுடைய எவருக்கும் ரத்தம் கொதித்துப் போகும்.
இதையெல்லாம் விட்டுவிட்டு அணு குண்டு வெடிக்க முடியாது என்று கூறி இதனை எதிர்க்கிறது பா.ஜ.க. இந்த தேசவிரோத ஒப்பந்தம் நிறைவேறனுமா, வேண்டாமா என்று இவர்கள் கூறுவதில்லை. என்ன செய்ய முடியும், காங்கிரஸ் அல்சேஷன் என்றால் பா.ஜ.க டாபர்மேன் இல்லையா?
இந்த ஒப்பந்தத்தை குறித்த பேச்சுவார்த்தையை ஆரம்பித்துவைத்ததே வாஜ்பாயிதான் என்று குட்டை உடைத்துவிட்டார் எம்.கே.நாராயணன் (இந்திய பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்) அத்தோடு இவர்களின் குலைக்கும் சத்தம் ஓய்ந்துவிட்டது.
“ஒப்பந்ததை ரத்து செய்யாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டிய போலிக் கம்யூனிஸ்டுகளைப் பார்த்து” மன்மோகன் சிங் “உங்களால் என்ன செய்ய முடியும், ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் வாங்கிக் கொள்வீர்கள்; வாங்கிக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டார்.
எனது எஜமானனுக்குச் சேவை செய்ய முடியாத ஆட்சி இருந்தாலென்ன போனால் என்ன கருதுகிறார் போலும்.
இந்தப் பிரதமர் பதவி அமெரிக்கா எனக்குப் போட்ட பிச்சை, 123 ஒப்பந்தத்திற்காக அதனை இழக்கவும் நான் தயங்கமாட்டேன் என்று கூறிய உடன் போலிக் கம்யூனிஸ்டுகளுக்கு பா.ஜ.க வின் மதவெறி நினைவுக்கு வர ஆட்சியையெல்லாம் கவிழ்க்க மாட்டோம் சும்மா இது பற்றி விவாதம் மட்டும் பண்ணினால் போதும், ஓட்டெடுப்பு கூட வேண்டாம் என்று இறங்கிவந்தார்கள்.
ஆனால் மன்மோகன் சிங்கோ தான் பிடித்த அமெரிக்க உச்சாணிக் கொம்பில் நின்று கொண்டு சிறிது கூட இறங்காமல் உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே என விவாதம்கூட செய்ய முடியாது என்று கூறிவிட்டார்.
உடனே ‘தோழர்கள்’ கடுமையான விளைவுகள் நேரிடும் என்று திரும்பவும் லாவணிபாட ஆரம்பித்து விட்டனர்.
கடந்த 100 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட போர்களில் ஈடுபட்டு, உலகம் முழுவதிலும் பல லட்சம் மக்களைக் கொன்று குவித்த ஒரு ரத்தவெறி பிடித்த ஏகாதிபத்திய மிருகம் அமெரிக்கா. அதன் காலடியில் நமது நாட்டை,அதன் இறையாண்மையை, நமது எதிர்காலத்தை, மற்ற நாடுகளுடன் நமது உறவை அடமானம் வைக்கும் அடிமைச்சாசனம்தான் 123 ஒப்பந்தம்.
இந்த உண்மை எல்லா அரசியல்வாதிக்கும் தெரியும்.
கோபா

Related:

ஈராக் : அமெரிக்கப் பயங்கரவாதத்தின் இரத்தச் சாட்சி

அமெரிக்க பயங்கரவாதத்தின் வரலாறு

உலகில் அதிகமாக தூக்கு தண்டனையினை நிறைவேற்றி மனிதர்களை கொல்வதும் அமெரிக்காதான் !!

 

 

1 Comments:

Blogger Arasu Balraj said…
நன்று. சத்தமில்லாமல் ரிலையன்சுக்கு மேற்கு வங்காளத்தின் சில்லறை வணிகத்தை தாரை வார்க்கும் போலி கம்யூனிஸ்டுகள், அணு ஒப்பந்தத்திற்கெதிராக கூப்பாடு போடுவது சரியான வேடிக்கைதான். இதைத்தான் ‘மாமியார் உடைத்தால் மண்குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடம்’ என்பதோ?
10:06 AM  

Read Full Post »

Older Posts »