Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஓகஸ்ட், 2009

கேரளாவில் உள்ள மராத் எனும் சிறு கிராமத்தில் நடந்த மதக்கலவர படுகொலைகள் மீது ஜனவரி 15, 2009இல் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பொதுவாக, இந்து மதவெறி பாசிசக் கொடுமையிலிருந்து சிறுபான்மையினரைத் தாங்கள்தான் காப்பதாக சி.பி.எம். மற்றும் காங்கிரசு கட்சிகள் உருவாக்கி வந்த மாயையை, இந்த தீர்ப்பின் பின்னணி தகர்த்துள்ளது.

கேரளத்தின் கடற்கரையோர மீனவ கிராமமான மராத்தில், கடந்த 2002இன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒரு முஸ்லீம் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட இந்து இளைஞருக்கும், அதனை தட்டிக்கேட்ட முஸ்லீம் இளைஞருக்கும் மோதல் உருவானது. இம்மோதல் பின்னர் மதக்கலவரமாக ஊதிப் பெருக்க வைக்கப்பட்டது.

ஜனவரி 2002இல் நடந்த இந்த கலவரத்தில் இரு மதத்தையும் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தில், முஸ்லீம்களின் வீடுகளும், சொத்துக்களும் சூறையாடப்பட்டன. கொல்லப்பட்டவர்களுக்காக சவக்குழி வெட்டிக் கொண்டிருந்த முஸ்லீம் பெரியவர் அபுபக்கர் என்பவரைக் கூட விட்டு வைக்காமல், ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் கொடூரமாகக் கொன்றனர்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காங்கிரசு அரசு நழுவிக் கொண்டது. தங்களுக்கு நீதி கிடைக்காத ஆத்திரத்தில், அபுபக்கரின் படுகொலைக்கு பழிவாங்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் 8 பேரை மே மாதம் 2003இல் அபுபக்கரின் உறவினர்கள் படுகொலை செய்தனர். கொலையானவர்களில் புஷ்பராஜ் என்ற உள்ளூர் ஆர்.எஸ்.எஸ் தலைவர், அபுபக்கர் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர்.

அபுபக்கரைக் கொன்றவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, இம்முறை உடனடியாக நூறுக்கும் மேலான முஸ்லீம்களைக் கைது செய்தது. ஊடகங்களும், அரசும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் தொடர்பு குறித்து மயிர் பிளக்க விவாதம் செய்தன. அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த பா.ஜ.க. அமைச்சர்கள் முஸ்லீம்களுக்கு எதிரான பல விதமான பொய்ச் செய்திகளை அதிகாரப் பூர்வமாகவே பரப்பினர். இந்தப் பொய்ப் பிரச்சாரத்தை அம்பலப்படுத்துவதற்கு பதில், அவற்றுக்கு விளக்கம் கொடுத்து லாவணி பாடிக் கொண்டிருந்தன சி.பி.எம்.மும், காங்கிரசும்.

இந்தப் படுகொலைகளைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் தாக்குதலின் காரணமாக, ஏறக்குறைய 500 முஸ்லீம் குடும்பங்கள் ஊரைக் காலி செய்து கொண்டு நிவாரண முகாம்களுக்கும், வேறு ஊர்களுக்கும் சென்றனர். காலியாய்க் கிடந்த முஸ்லீம்களின் வீடுகளை “மதச்சார்பற்ற’ காங்கிரசு அரசின் காவல்துறையினர் உதவியுடன் கொள்ளையடித்து சூறையாடினர் ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள். அந்த பகுதியே முற்றிலுமாக ஆர்.எஸ்.எஸ்இன் ஆட்சிப் பிரதேசமாக மாறிவிட்டிருந்தது.

மராத் கிராமத்திற்குள் வெளியாட்கள் நுழைவதை ஆர்.எஸ்.எஸ் தடை செய்திருந்தது. அன்றைய முதலமைச்சர் காங்கிரசின் அந்தோணியே கூட இந்து பயங்கரவாதிகளின் நிபந்தனைகளின்படி நடந்து கொண்ட பின்னர்தான் கிராமத்திற்குள் அனுமதிக்கப்பட்டார். அனைவரும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளின் காலில் விழாத குறையாகக் கெஞ்சிக் கொண்டிருந்தனர். கிராமத்திற்குள் மிகச் சுதந்திரமாக நுழைந்து வெறியேற்றிக் கொண்டிருந்தான், இந்து மதவெறி பயங்கரவாதியான பிரவீன் தொகாடியா.

1970களில் இருந்து இந்த பகுதியில் ஆர்.எஸ்.எஸ் தனது “”ஷாகா”க்களை நடத்தி மதவெறியை ஊட்டி வளர்த்து வந்துள்ளது. 2002 மராத் கலவரத்திற்கு முன்னும், பின்னும் காங்கிரசும், சி.பி.எம்முமே கேரளாவை ஆண்டுள்ளன. ஆனால், இவர்கள் இந்து மதவெறியைத் தூண்டி கலவரம் செய்யும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளை ஒடுக்க எந்தவொரு நடவடிக்கையையும் எடுத்ததில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களே மீண்டும் மீண்டும் தண்டிக்கப்பட்டனர்.

2002 மதக் கலவரத்தின் போது அரசு பாராமுகமாக நடந்து கொண்டதன் மூலம் கலவரத்தில் மிக முக்கிய பங்காற்றிய ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. பயங்கரவாதிகளைக் காப்பாற்றியது. அந்தக் கலவரத்தின் முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளிகளாக பதிவு செய்யப்பட்டிருந்த 392 பேரில் 213 பேர் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்யைச் சேர்ந்தவர்கள். இவ்வழக்கு முற்றிலும் கிடப்பில் போடப்பட்டிருந்தது. நீதிமன்றத்தில் கூட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கவில்லை. கைதுசெய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளான இந்து பயங்கரவாதிகள் உடனடியாகவே பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் முழுமூச்சில் மதவெறி பிரச்சாரத்தில் இறங்கினர். இன்று வரை அவர்கள் கைது செய்யப்படவில்லை. ஆனால், 2003இல் கைது செய்யப்பட்ட 138 முஸ்லீம்களுக்கும் வழக்கம் போல பிணை மறுக்கப்பட்டது. அவர்கள் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டனர்.

2002இல் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவொரு நிவாரணமும் வழங்கப்படவில்லை. ஆனால், 2003இல் நடந்த பழிவாங்கும் படுகொலையில், கொலை செய்யப்பட்ட இந்துவெறியர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 5 லட்சமும் வழங்கியது “மதச்சார்பற்ற’ காங்கிரசு அரசு. இதுவரை இந்தியாவில் நடந்த எந்த மதக் கலவரத்திலும் இந்தளவுக்கு நிவாரணம் கொடுக்கப்பட்டதில்லை.

2002இல் நடந்த கலவரத்தின் போது உடனடியாக பெரிய அளவில் போலீசு படைகளை இறக்கி பாதுகாப்பை வழங்கிய அரசு, 2003இல் நடந்த படுகொலைக்குப் பிறகு அந்த பகுதியின் பாதுகாப்பை முற்றிலும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளிடம் விட்டது. 2003இல் நடந்த படுகொலைகளை, பழிவாங்கும் நடவடிக்கை என்று டி.ஜி.பி. கே.ஜெ.ஜோசப் கூறினார். ஆனால், அரசும், ஊடகங்களும் இந்த சம்பவத்தை மத அடிப்படைவாதிகளின் திட்டமிட்ட சதியாகச் சித்தரித்தன. சி.பி.எம். ஆட்சியின் போது வெளியிடப்பட்ட நீதிமன்ற விசாரணை அறிக்கை இதையே வாந்தியெடுத்திருந்தது.

அந்த அறிக்கையில், 2002இல் நடந்த கலவரத்திற்கும் 2003இல் நடந்த படுகொலைகளுக்கும் தொடர்பே இல்லாதது போல குறிப்பிடப்பட்டிருந்தது. ஆர்.எஸ்.எஸ்.க்கும் இந்த மதக் கலவரத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என இந்த அறிக்கை கூறுகிறது. முஸ்லீம் அடிப்படைவாதிகள் மட்டும்தான் இவையனைத்திற்கும் காரணம் என்றும், அவர்கள்தான் மதவெறி பிரச்சாரம் செய்தனர் என்றும் குறிப்பிடும் அறிக்கை, மராத் கிராமம் முழுவதையும் இந்து மதவெறியூட்டி வைத்திருந்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளின் பங்கை மறைத்தது.

பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் இருப்பது குறித்தோ அல்லது போலீசு துணையுடன் முஸ்லீம்களின் வீடுகள், சொத்துக்கள் சூறையாடப்பட்டது குறித்தோ அறிக்கையில் மூச்சு கூட விடப்படவில்லை . மராத் பகுதியே இந்துத்துவ பயங்கரவாதிகளின் விடுதலைப் பிரதேசமாக இருப்பது குறித்தும் எதுவும் பேசப்படவில்லை . இதைத்தான் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையாக வெளியிட்டது “முற்போக்கு’, “மதச்சார்பற்ற’ சி.பி.எம். அரசு.

முஸ்லீம்களாக பிறந்த ஒரே பாவத்தைச் செய்த மராத் மீனவ மக்களின் மீதான இந்துத்துவ அரசு பயங்கரவாதம் இத்துடன் நிற்கவில்லை. 2003இல் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு மிக முக்கியமானதாக எடுத்துக் கொள்ளப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த வழக்கில் 67பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜனவரி 2009இல் தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், 2002 கலவரம் குறித்த வழக்கோ இன்று வரை ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் நான்கு ஆண்டுகள் பிணை கிடைக்காமல் சிறையிலிருந்த 78 முஸ்லீம்கள் இன்று வாழ்க்கையைத் தொலைத்த விரக்தியில் பேசுகின்றனர். சிறையில் காவல்துறையின் சித்திரவதைகளினால் உடல் நைந்து துவண்டு போயுள்ளனர். அவர்களது குடும்பங்கள் காப்பாற்ற ஆளின்றி பஞ்சை பாராரிகளாக சீரழிந்துவிட்டன. அவர்களது வீடுகளும், மீன்பிடி படகுகளும் உடைத்து நொறுக்கப்பட்டு விட்டன. 2003க்குப் பிறகு மராத்துக்கு திரும்பிய முஸ்லீம் குடும்பங்களோ சமூகப் புறக்கணிப்புக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுக்கு யாதொரு நிவாரணம் வழங்கப்படவில்லை.

2003இல் மராத் சென்ற ஒரு நிருபரிடம் இந்துத்துவ பயங்கரவாதிகள் பின்வருமாறு கூறினர்: “”இங்கு இன்னொரு குஜராத்தை நடத்தினால்தான் முஸ்லீம்கள் பாடம் கற்றுக் கொள்வார்கள்.” அவ்வாறே, இன்னொரு குஜராத்தை கேரளாவில் நடத்திக் காட்டியுள்ளனர் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள். 2002இல் மோடி அரசு குஜராத்தில் சிறுபான்மையினருக்கு எதிராகவும், இந்து பயங்கரவாதிகளுக்கும் ஆதரவாகவும் எப்படி செயல்பட்டதோ, அதே போலத்தான் கேரளாவில் சி.பி.எம். மற்றும் காங்கிரசு அரசுகளும் செயல்பட்டுள்ளன. கோத்ராவில் கொல்லப்பட்டவர்களுக்கு பழிவாங்கும் வகையிலேயே குஜராத் கலவரம் நடந்தது என்று சொன்ன குஜராத் அரசுக்கும், 2003இல் நடந்த படுகொலைகள் மதக் கலவரங்களை தூண்டும் முஸ்லீம் அடிப்படைவாதிகளின் சதி என்ற கேரள சி.பி.எம்.காங்கிரசு அரசுகளின் கருத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

புதிய ஜனநாயகம் ஜீலை 09

Read Full Post »

லால்காரில் அமைதி திரும்பிக் கொண்டிருக்கிறது; பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது” என்று எக்காளமிடுகின்றன டெல்லி மைய அரசும், மே.வங்க மாநில அரசும். மாவோயிஸ்டுகளைப்பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி, அவ்வமைப்புக்கு மைய அரசு சட்டபூர்வமாகத் தடை விதித்துள்ளது.

மே.வங்க லால்கார் வட்டாரத்தின் ஜித்கா காடுகளிலிருந்து மாவோயிஸ்டுகளை வெளியேற்றுவோம் என்று மே.வங்க இடதுசாரி அரசின் போலீசுப் படையும், மைய அரசின் துணை இராணுவப் படைகளும் அதிரடிப் படைகளும் அதிநவீன ஆயுதங்களுடன் தேடுதல் வேட்டை நடத்துகின்றன. போலீசு – துணை இராணுவப் படைகளின் அடக்குமுறைக்கு அஞ்சி,லால்கார் பழங்குடியின மக்கள் காடுகளிலிருந்து வெளியேறி அகதி முகாம்களில் அவதிப்படுகிறார்கள்.

தமது வாழ்வுரிமைக்காகவும், அரசு மற்றும் சி.பி.எம். குண்டர்களின் அடக்குமுறைக்கு எதிராகவும் போராடி வரும் லால்கார் பழங்குடியின மக்களை வன்முறையாளர்கள்,அராஜகவாதிகள் என்று குற்றம் சாட்டுகிறது, மே.வங்க இடதுசாரி அரசு. “இம்மக்களை இடதுசாரி அரசுக்கு எதிராகத் தூண்டி விட்டு வன்முறைப் போராட்டங்களைக் கட்டவிழ்த்து விட்டும்,அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திக் கொண்டு பயங்கரவாதச் செயல்களிலும் மாவோயிஸ்டுகள் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சியான திரிணாமுல் காங்கிரசு, இவர்களுடன் கள்ளக்கூட்டுச் சேர்ந்து மாநிலமெங்கும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, இடதுசாரி ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்கிறது” என்று மே.வங்கத்தை ஆளும் சி.பி.எம். கட்சியும் ஆட்சியும் குற்றம் சாட்டுகின்றன.

லால்கார் பழங்குடியின மக்களோ எப்போதுமே அமைதியானவர்கள்; உண்மையானவர்கள். அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் வறுமையில் உழலும் அவர்கள், சாலை வசதியே இல்லாத கரடுமுரடான காட்டுப் பாதையில் நீண்ட நெடும்பயணமாக கண்ணீர் மல்க நோயுற்ற தமது அன்புக் குழந்தைகளை தூக்கிக் கொண்டு மாவட்ட மருத்துவமனைக்கு ஓடி, அங்கே சிகிச்சை பலனளிக்காமல் குழந்தைகள் மாண்டு போகும்போது அவர்கள் கதறியழுவார்கள். லால்கார் வட்டாரத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தில்லாத போதும், மருத்துவர்களே இல்லாதபோதும், அவர்கள் தமது விதியை நொந்து கொண்டு அமைதியாகவே இருந்தார்கள்.

கோடை காலங்களில் குடிநீர் இல்லாமல் தத்தளிக்கும்போதும், காட்டுக் கிழங்குகளை வேகவைத்து பசியாறிக் கொண்டு பட்டினியால் பரிதவித்த போதும், ஆரம்பப் பள்ளி இல்லாமலும் ஆசிரியரே இல்லாத பள்ளியாலும் தமது குழந்தைகள் தொடக்கக் கல்விகூடக் கற்க முடியாத அவலத்தைக் கண்டபோதும் – இவையெல்லாம் தலைமுறை தலைமுறையாக உள்ள விசயம்தானே என்று தமக்குத்தாமே ஆறுதல்பட்டுக் கொண்டு அமைதியாக இருந்தார்கள்.


இன்று அகதி முகாம்களில் தஞ்சமடைந்துள்ள லால்கார் பழங்குடியின மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்ய கொல்கத்தாவிலிருந்து சென்ற மருத்துவர்கள், “இப்போது இம்மக்களுக்கு மருந்து – மாத்திரைகள் அவசியமில்லை;சத்தான உணவுதான் உடனடித் தேவையாக உள்ளது” என்கின்றனர். நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரான அமர்த்யா சென்,இம்மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர், “பசியும் பட்டினியும்தான் மிகக் கொடிய வன்முறை” என்றார். தமது மக்களுக்கு உணவளிக்காத அரசுதான், அம்மக்கள் மீது வன்முறையை ஏவும் கொடிய குற்றவாளி என்று அவர் சாடியுள்ளார். அவரது வாதப்படி, குற்றவாளியான மே.வங்க இடதுசாரி அரசு, பசி-பட்டினி எனும் வன்முறையை லால்கார் பழங்குடியின மக்கள் மீது தொடர்ந்து ஏவி வந்துள்ள போதிலும்,இம்மக்கள் நல்வாழ்வை எதிர்பார்த்து அமைதியாகவே காத்திருந்தார்கள்.

ஒவ்வொரு முறையும் சட்டமன்ற – நாடாளுமன்ற – உள்ளாட்சித் தேர்தல்களில், ஏழைகளின் நண்பனாகக் காட்டிக் கொள்ளும் இடதுசாரிக் கூட்டணி கட்சிகளுக்கே அவர்கள் வாக்களித்தார்கள். வாக்குறுதிகள் வீசப்பட்டனவே தவிர, அவை லால்கார் வட்டார மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. வறுமை ஒழிப்புக்காகவும், வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் ஒதுக்கப்பட்ட நிதி அவர்களைச் சென்றடையவும் இல்லை. நாட்டின் பங்குச் சந்தை புள்ளிகள் நாலுகால் பாச்சலில் முன்னேறிய போதிலும், ஏகபோகக் கம்பெனிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளது ஊதியம் கோடிக்கணக்கில் அதிகரித்த போதிலும், இந்தியாவல்லரசாக ஒளிர்ந்த போதிலும், இவையெல்லாம் லால்கார் பழங்குடியின மக்களின் வாழ்வில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.

இருப்பினும், இவையெல்லாம் வன்முறையே அல்ல என்பதுதான் புரட்சி பேசும் போலி கம்யூனிஸ்டுகளின், ஆளும் வர்க்கங்களின், மேட்டுக்குடி கும்பல்களின், அவர்களின் ஊதுகுழல்களான தேசிய பத்திரிகைகளின் வாதம். பழங்குடியின மக்களைப் போலீசார் இழுத்துச் சென்று வதைத்தாலும், பொ வழக்குப் போட்டுச் சிறையிலடைத்தாலும் அவை வன்முறையோ,பயங்கரவாதமோ அல்ல. சி.பி.எம். குண்டர்கள் மற்றும் போலீசின் அடக்குமுறையின் கீழ் அவர்கள் இருத்தி வைக்கப்பட்டாலும், அது வன்முறை அல்ல; புதிய விசயமும் அல்ல.

வறுமையையும் அடக்குமுறையையும் சகித்துக் கொண்டு அமைதியாக இருந்த பழங்குடியின மக்கள் மெதுவாக விழித்தெழுந்து போராடத் தொடங்கினால், அது சட்டம் – ஒழுங்கைச் சீர்குலைக்கும் வன்முறை! பழங்குடியினக் கிராமங்களைச் சுற்றி வளைத்துச் சூறையாடி விடிய விடிய வதைத்த போலீசாரின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடி, போலீசாரை அப்பகுதியிலிருந்து விரட்டியடித்தால், அது பயங்கரவாதம்!

அவர்கள் போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டியை நிறுவினார்கள். அந்தக் கமிட்டி கிராமங்களில் மருத்துவ – சுகாதார வசதியும், பள்ளிகள் – சாலைகள் – பாலங்கள் உள்ளிட்டு மின்சார வசதியும் ஏற்படுத்தித் தரக் கோரி கடந்த எட்டு மாதங்களாகப் போராடி வருகிறது. அடக்குமுறையில் ஈடுபட்ட போலீசார் மக்கள் முன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும்; அதுவரை போலீசாரையோ அரசு அதிகாரிகளையோ இப்பகுதியினுள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்ற கோரிக்கையுடன் மக்களைத் திரட்டிப் போராடி வருகிறது.

இவையெல்லாம் சட்டம் – ஒழுங்கைச் சீர்குலைக்கும் அராஜக – வன்முறைகள் என்று சாடுகிறது. மே.வங்க இடதுசாரி அரசு. ஆனால்,இந்த அராஜக – வன்முறையாளர்கள், மக்களின் சுயவிருப்ப உழைப்பின் மூலம் 20 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைத்துள்ளார்கள்.இடதுசாரி அரசின் பஞ்சாயத்து நிர்வாகம் சாலையே போடாமல், ஒரு கி.மீ. சாலை அமைக்க ரூ. 15,000 வீதம் செலவிட்டதாகக் கணக்கு காட்டி ஏக்கும் நிலையில், 20 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்க மொத்தம் ரூ.47,000 செலவாகியுள்ளதாக அவர்கள் கணக்குகளை எழுதி மக்களின் பார்வைக்கு வைத்துள்ளார்கள்.

இது மட்டுமின்றி, கடந்த எட்டு மாதங்களில் அவர்கள், தூர்ந்து போன குடிநீர்க் கிணறுகளைச் சீரமைத்தும் புதிய கிணறுகளைத் தோண்டியும்,பள்ளிக்கூடங்களை நிறுவியுமுள்ளார்கள். நிதியில்லை என்று இடதுசாரி அரசு புறக்கணித்து இழுத்து மூடிவிட்ட கண்டபாஹரி கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தை அவர்கள் சீரமைத்து உள்ளூர் மருத்துவர்களைக் கொண்டு மக்களுக்குச் சிகிச்சையளிக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, காடுகளை ஒட்டியுள்ள புறம்போக்கு நிலங்களை, நிலமற்ற பழங்குடியினருக்கு விநியோகிக்கச் சட்டம் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்படாத நிலையில், கண்டபாஹரி,பன்ஷ்பேரி கிராமங்களை அடுத்துள்ள புறம்போக்கு நிலங்களை, நிலமற்ற விவசாயிகளுக்கு விநியோகித்துள்ளார்கள். இந்நடவடிக்கைகளுக்காக அவர்கள் இடதுசாரி அரசின் உதவியை எதிர்பார்த்து நிற்கவில்லை. எதிர்பார்த்தாலும், அது கிடைக்கப் போவதுமில்லை.

கடந்த நவம்பரில் போலீசு பயங்கரவாத அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய லால்கார் பழங்குடியின மக்கள், லால்கார் போலீசு நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாரை விரட்டியடித்து, போலீசு நிலையத்தை இழுத்து மூடினர். லால்கார் காடுகளை அழித்து 5000 ஏக்கர் பரப்பளவில் ஜிண்டால் எனும் தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனம் தொடங்கவுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டத்தை முற்றாக ரத்து செய்யவும், அடக்குமுறையை ஏவிய போலீசார் பகிரங்க மன்னிப்பு கேட்கவும் கோரி இம்மக்கள் தொடர்ந்து போராடி வந்ததால்,இப்பகுதிக்குள் போலீசாரோ, அரசு அதிகாரிகளோ நுழைய முடியவில்லை. அதன்பிறகு நாடாளுமன்றத் தேர்தலின்போது, வாக்குப் பதிவைக் கண்காணித்து முறைப்படுத்துவது என்ற பெயரில் போலீசு முகாமிட முயற்சித்தது. போலீசுடன் கூட்டுச் சேர்ந்து சி.பி.எம். குண்டர்கள் இப்பழங்குடியின மக்கள் மீது தாக்குதல் நடத்தி, அதிகாரவர்க்க – போலீசு ஆட்சியை நிறுவ எத்தணித்தனர். அந்த முயற்சியையும் லால்கார் மக்கள் தமது போராட்டங்களால் முறியடித்தனர்.

தேர்தல் முடிந்த பிறகு, இப்போது மீண்டும் தமது அதிகாரத்தை நிலைநாட்ட போலீசும் – அதிகார வர்க்கமும் கிளம்பின. அதனுடன் கூட்டுச் சேர்ந்து சி.பி.எம். குண்டர்கள் ஆள்காட்டிகளாகவும் அடியாட்களாகவும் செயல்பட்டனர். இவர்களின் கூட்டுச் சதிகள் – சூழ்ச்சிகள் – தாக்குதல்களை முறியடித்த லால்கார் பழங்குடியின மக்கள், கடந்த ஜூன் 15-ஆம் தேதியன்று சி.பி.எம். குண்டர்படைத் தலைவர்களது வீடுகளையும் உள்ளூர் சி.பி.எம் கட்சி அலுவலகங்களையும் தாக்கித் தீயிட்டுக் கொளுத்தினர்.

இதற்கு முன்னதாக, நந்திகிராமம் – கேஜூரி பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசு வெற்றி பெற்றதும், ஹேதியா நகரிலுள்ள சி.பி.எம். வட்டாரக் கமிட்டி அலுவலகம் ஜூன் 9-ஆம் தேதியன்று திரிணாமுல் காங்கிரசு கட்சியினரால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. அரசு அதிகாரத்தைக் கொண்டும் குண்டர் படைகளைக் கொண்டும் தேர்தலின் போது வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்து விட்ட சி.பி.எம். உள்ளூர் தலைவர்களது வீடுகளும் கட்சி அலுவலகங்களும் நந்திகிராமம் பகுதியில் அடுத்தடுத்து திரிணாமுல் காங்கிரசு கட்சியினரால் தாக்கப்பட்டுத் தீயிடப்பட்டன.

இவற்றை அரசியல் வன்முறை என்று சாடும் சி.பி.எம் கட்சி, லால்கார் மக்கள் போராட்டத்தை மட்டும் பயங்கரவாத வெறியாட்டம் என்று குற்றம் சாட்டுகிறது. லால்கார் மக்கள் சி.பி.எம். அலுவலகங்களையும் குண்டர்படைத் தலைவர்களது வீடுகளையும் மட்டும் தாக்கித் தீயிடவில்லை. அவர்கள் போலீசாரையும் அதிகார வர்க்கத்தையும் அடித்து விரட்டி விட்டு, அரசு அடக்குமுறையிலிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்துக் கொண்டு, தமது சோந்த ஆட்சியை நடத்துகிறார்கள். அதுதான் பயங்கரவாதம் என்கிறது இடதுசாரி அரசு. சட்டத்தின் ஆட்சிக்கு எதிராக, அதிகார வர்க்க – போலீசு ஆட்சிக்கு எதிராக தமது சோந்த ஆட்சியை நிறுவக் கிளம்பிவிட்டார்களே, அதுதான் பயங்கரவாதம் என்கிறது சி.பி.எம். அரசு.

இப்பயங்கரவாதத்தையும், அதைப் பின்னாலிருந்து கொண்டு இயக்கி வரும் மாவோயிஸ்டு பயங்கரவாதிகளையும் முறியடிக்க மாநிலப் போலீசுப் படை போதாது; மைய அரசின் துணை ராணுவப் படைகளையும் அனுப்ப வேண்டும்” என்று டெல்லிக்குப் பறந்தார், போலி கம்யூனிஸ்டு முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா. அரசியலில் எதிரெதிர் முகாம்களில் உள்ள காங்கிரசும் சி.பி.எம்.மும் லால்கார் மக்களின் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் ஓரணியில் நின்றன. முதலில் மூன்று கம்பெனி துணை இராணுவப் படைகளை அனுப்பிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்,அடுத்ததாக “கோப்ரா” அதிரடிப்படையையும் எல்லைப் பாதுகாப்பு படையின் ஒரு பிரிவினரையும் லால்காருக்கு ஏவினார். மொத்தம் எவ்வளவு போலீசு – துணை ராணுவப் படையினர் லால்காரில் குவிக்கப்பட்டனர் என்ற விவரத்தை இன்றுவரை அரசு அறிவிக்கவில்லை. மாவோயிஸ்டுகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துத் தடை செய்த மைய அரசு, லால்கார் காடுகளிலிருந்து அவர்களை வெளியேற்றி அழிப்பது என்ற பெயரில் இவ்வட்டாரமெங்கும் அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது. மே.வங்க இடதுசாரி அரசு அதற்கு ஒத்தூதியது.

இப்பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க லால்கார் பழங்குடியின மக்கள் சாலைகளில் மரங்களை வெட்டிப் போட்டும் அகலமான குழிகளை வெட்டியும் தடையரண்களை ஏற்படுத்தி, வில்-அம்பு, கோடாரிகளுடன் அரசு பயங்கரவாதப் படைகளை மறித்து நின்றார்கள். “அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நடத்தாதீர்கள்;நாங்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தயாராக உள்ளோம்” என்று பழங்குடியின மக்களின் போராட்டக் கமிட்டி மத்திய-மாநில அரசுகளிடம் பலமுறை கோரிய போதிலும், அவை ஏற்க மறுத்துவிட்டன. மறித்து நின்ற மக்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கிராமங்களைச் சூறையாடி கண்ணில்பட்டவர்களைக் கொடூரமாகத் தாக்கி போலீசும் துணை இராணுவப் படைகளும் வெறியாட்டம் போட்டன. இப்படி ஒவ்வொரு கிராமமாகச் சுற்றி வளைத்து அரசு பயங்கரவாதிகள் தாக்குவதையும், இதற்குத் துணையாக வான் படையின் ஹெலிகாப்டர்கள் வட்டமிடுவதையும் கண்டு அஞ்சிய மக்கள்,கிராமங்களை விட்டு வெளியேறி நகரத்திலுள்ள பள்ளிகள் – மைதானங்களில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனர்.

லால்கார் பகுதிக்குள் பத்திரிகையாளர்களோ, மனித உரிமை அமைப்பினரோ, தன்னார்வக் குழுக்களோ நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, அரசு பயங்கரவாத அட்டூழியங்கள் வெளியுலகுக்குத் தெரியாமல் மூடிமறைக்கப்படுகின்றன. இக்கொடுஞ்செயலுக்கு எதிராக பிரபல வரலாற்றியலாளரான சுமித் சர்க்கார், பிரபல எழுத்தாளர் பிரஃபுல் பித்வா, மகாசுவேதாதேவி,கலைஞர்களான தருண் சன்யால், கௌதம் கோஷ், அபர்ணா சென் முதலானோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொல்கத்தாவில் மனித உரிமை இயக்கத்தினரும் அறிவுத்துறையினரும் கண்டனப் பேரணி நடத்தியுள்ளனர்.

லால்கார் மக்களை மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் தூண்டிவிட்டு அரசுக்கெதிராகப் போராட்டம் நடத்துகிறார்கள் என்று போலி கம்யூனிச ஆட்சியாளர்கள் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கும்போதே, எந்த மாவோயிஸ்டு தூண்டுதலும் இல்லாமல் பிர்பூம் மாவட்டம் போல்பூரில் மே.வங்க அரசின் நிலப்பறிப்புக்கு எதிராக விவசாயிகள் தன்னெழுச்சியாகத் திரண்டு அண்மையில் போராட்டத்தை நடத்தியுள்ளனர். போராடிய விவசாயிகளை போலீசும் சி.பி.எம். குண்டர்களும் கூட்டுச் சேர்ந்து தாக்கி ஒடுக்குவதை முதலாளித்துவப் பத்திரிகைகளே படம் பிடித்து அம்பலப்படுத்துகின்றன.

புரட்சி சவடால் அடித்து வந்த போலி கம்யூனிஸ்டுகள், மறுகாலனியாக்க சூழலில் உழைக்கும் மக்களின் எதிரிகளாகவும் குண்டர்படைகளை ஏவி மக்களைக் குதறும் பாசிச பயங்கரவாதிகளாகவும் சீரழிந்து விட்டதை சிங்கூர்-நந்திகிராமம் முதல் இன்று லால்காரில் நடந்துள்ள வெறியாட்டங்கள் வரை திரும்பத் திரும்ப நிரூபித்துக் காட்டுகின்றன. காங்கிரசு அரசும் மே.வங்க இடதுசாரி அரசும் கூட்டுச் சேர்ந்து பயங்கரவாத வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டு, லால்காரை விடுதலை செய்து அமைதியை நிலைநாட்டிவிட்டதாக அறிவிக்கின்றன. இவ்வளவுக்குப் பின்னரும் நாட்டு மக்கள் நடுநிலை வகிக்கவோ இடதுசாரிஅரசு மீது நம்பிக்கை வைக்கவோ அடிப்படை இல்லை. அரசு பயங்கரவாத அடக்குமுறைக்கு உழைக்கும் மக்கள் அடங்கிக் கிடந்ததாக வரலாறுமில்லை.

Read Full Post »

« Newer Posts